செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Tuesday, January 8, 2008

புத்தகக் காட்சி - நான்காம் நாள்


நேற்று மாலை கண்காட்சி வளாகத்தில் “ஒரு லட்சம் பக்கங்களும் இரு நூற்றாண்டுகளும்” என்னும் கலைஞர் படைப்பரங்கத் திறப்பு விழா நடைபெற்றது.

கண்காட்சி அமைப்பாளர்கள் அனைவரும் சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்திருந்த பொழுதில், திறந்துவைக்க வந்த மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராஸ்வாமி, தன்னை வரவேற்க யாரும் இல்லாமல் சுமார் பதினைந்து நிமிடங்கள் காரிலேயே அமர்ந்து காத்திருந்தார். பிறகு சிறப்புரை ஆற்ற வந்த கனிமொழி வந்து சேர, அவர் வந்து வீராஸ்வாமியை வரவேற்றார். இதன்பின்பே அமைப்பாளர்களுக்கு அமைச்சர் வந்திருக்கும் செய்தி தெரியவந்தது. அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடிவந்தனர்.

அதற்குள் “சென்னை சங்கமம்” குழுவினர் பொய்க்கால் ஆட்டம் நடத்தியபடி தாரை தப்பட்டைகளுடன் கண்காட்சி வளாகத்தை நெருங்கி நிறைத்துக்கொண்டுவிட அமைப்பாளர்கள் அமைச்சரை நெருங்கவே சிரமமாகிப் போய்விட்டது.

அமைப்பாளர்களுக்குப் பின்னால் வந்த குமரி அனந்தன் அரங்கத்துக்கு உள்ளே நுழையவே முடியாமல் சிரமப்பட்டார். “தலைவருக்கு வழி விடுங்க” என்று அவரது தொண்டர்கள் பரிதாபமாகக் கெஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
ஒருவழியாகக் கண்காட்சியைத் திறந்துவைத்துவிட்டு அனைவரும் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்ற ஆண்டும் இதே போன்றதொரு கலைஞர் படைப்பரங்கம் திறக்கப்பட்டது. கலைஞர் அவர்கள் எழுதிய பக்கங்களும் அவரது புகைப்படங்களும் கொண்ட கண்காட்சி இது. ஆண்டுதோறும் நடத்துவது மட்டுமல்லாமல், சென்னை, மதுரை, கோவை என்று பல நகரங்களிலும் இக்கண்காட்சி நடத்தப்படும் என்று வரவேற்புரையில் கவிஞர் இளையபாரதி தெரிவித்தார்.

விழா மேடையில் தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ. அன்பழகன், ஆர்க்காடு வீராஸ்வாமி, கனிமொழி, இளையபாரதி என்று கட்சிக்காரர்களே ஆக்கிரமித்திருந்தனர். அவர்கள் பேசிய பேச்சும் புத்தகக் கண்காட்சிக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதாகவே அமைந்திருந்தது. முன்மொழிதலும் வழி மொழிதலும் மட்டுமே இல்லை. மற்றபடி கட்சிக்கூட்டம் போலவே இவ்விழா நடத்தப்பட்டது.

கூட்டத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவர், “அடுத்த ஆட்சியை அ.தி.மு.க. அமைத்தால் “புரட்சித்தலைவி அழகரங்கம்” என்றொரு கண்காட்சி நடத்துவார்களா? அதில் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து புகைப்படங்கள் இடம்பெறுமா?” என்று கமெண்ட் அடித்தார்.

*

தொடக்க விழா ரத்தானதை ஈடு செய்வதன்பொருட்டு கலைஞர் அவர்கள் பங்குபெறும் சிறப்பு விழா இன்று மாலை புத்தகக் காட்சி அரங்கத்தில் நடைபெறுகின்றது. விருது பெறும் ஐந்து படைப்பாளிகளுக்கும் இன்று தலா ஒரு லட்ச ரூபாய்ப் பரிசு வழங்கப்பெறும்.

ஏற்கெனவே பூந்தமல்லி நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறுகின்றது. இன்றைக்கு பாதுகாப்புக் காரணங்களினால் மேலும் கெடுபிடிகளும் நெரிசலும் ஏற்படலாம். வாசகர்கள் சற்று முன்னதாகவே கண்காட்சிக்கு வந்துவிடுவது நல்லது என்று தோன்றுகிறது.

நேற்றைக்கு மக்கள் கூட்டம் அதிகம் இல்லை. வளாகம் காற்றோட்டமாக இருந்தது. கடைகளிலும் வியாபாரம் சுமாராகவே இருந்தது. வாரத்தின் முதல் தினம் என்பதனால் இந்தத் தேக்கம், நாளை சரியாகிவிடும் என்று பதிப்பாளர்கள் சொன்னார்கள்.

1 comment:

Anonymous said...

//மின் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராஸ்வாமி,//

பெயரை ஒழுங்கா எழுதுங்கய்ய்யா... அவர் ' ஆர்க்காடு வீராஸ்வாமி' அல்லர், ' ஆற்காடு வீராசாமி'