செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Thursday, January 3, 2008

உங்களுக்கு தங்க டிக்கெட் வேண்டுமா?

தினமணி நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தியில் இருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் 31-வது சென்னை புத்தகக் கண்காட்சி சேத்துப்பட்டு செயின்ட் ஜார்ஜ் இங்கிலோ ஈந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன. 4) தொடங்குகிறது.

ஜனவரி 17-ம் தேதி வரையில் புத்தகக் கண்காட்சியின் திட்டங்கள் குறித்து சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சிறிய பதிப்பாளர்களுக்கு ஸ்டால்களுக்கு வாடகை கொடுக்க சக்தி இருக்காது. எனவே, 30 சிறிய பதிப்பாளர்கள் தங்களது நூல்களை அழகாக தனித்தன்மையோடு புத்தக அடுக்குகளாக விற்பனைக்கு வைக்க இரண்டாயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 5 லட்சம் தலைப்புகளில், 5 கோடிக்கு மேல் புத்தகங்கள் இடம்பெறும்.

தொடக்க விழாவில், "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதினை' முதல்வர் கருணாநிதி வழங்குவார். உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, மாநில திட்டக்குழுத் துணைத் தலைவர் நாகநாதன் சிறப்புரை ஆற்றுவர்.

தங்க டிக்கெட்: இந்த ஆண்டு தங்க டிக்கெட் என்ற முறை அறிமுகமாகிறது. இதன்படி ரூ.100 கொடுத்துவிட்டால், ஐந்து பேர் கண்காட்சிக்கு ஒரு நாளில் எத்தனை முறையும் வரலாம்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்காக இலவச டிக்கெட் வழங்கப்படும். இதற்காக 12 லட்சம் டிக்கெட்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்படும்.

பேச்சுப் போட்டிகள் ஜனவரி 7-ம் தேதியும், ஓவியப் போட்டிகள் ஜனவரி 6-ம் தேதியும் நடத்தப்படும் என்றார் காந்தி கண்ணதாசன். உடன் செயலர் சண்முகம், சங்கத்தின் முன்னாள் தலைவர் முத்துக்குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: