செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Monday, December 31, 2007

கண்காட்சி வளாகம் தயாராகிறது

புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் பள்ளித் திடல் இன்னும் தயாராகவில்லை. இன்று சென்று பார்த்தபோது, ஸ்டால்கள் அமைக்கும் பணி இப்போதுதான் தொடங்கியிருப்பது தெரிந்தது.

கண்காட்சி தொடங்கச் சரியாக நான்கு நாட்களே இருக்கின்றன. ஏன் இத்தனை தாமதமாக வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது நேற்றுவரை வேறு ஏதோ ஒரு மாநாடு அங்கு நடந்ததாகவும், இப்போதுதான் முடிந்திருப்பதாகவும், அதனால்தான் தாமதம் என்றும் தெரியவந்தது.

எப்படியும் 3ம் தேதி மாலைக்குள் தயாராகிவிடும் என்று சொல்கிறார்கள்.

பதிப்பாளர்களுக்குத்தான் திண்டாட்டமாக இருக்கும். குறுகிய அவகாசத்தில் அவர்கள் புத்தகங்களையும் தேவைப்படும் பிற உபகரணங்களையும் எடுத்துச் சென்று வைத்து, அழகு படுத்துவது போன்ற காரியங்களை மேற்கொள்ளவேண்டும். சென்றமுறை கண்காட்சி தொடங்கி இருநாள்கள் ஆனபிறகும் பல பதிப்பாளர்கள் புத்தகங்களையே அடுக்காமல் கடையை காலியாக விட்டிருந்ததைக் கண்டது நினைவுக்கு வந்தது.

இம்முறை ஐநூறுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கவிருக்கிறார்கள். சென்ற முறை போலல்லாமல் இம்முறை கண்காட்சி வளாகத்துக்குள் நுழைய ஆறு வாசல்கள் அமைக்கிறார்கள். வாசகர்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சென்று வரலாம். ஒருநாள் ஒரு பக்கம், மறுநாள் வேறு பக்கம் என்கிற கெடுபிடி நிலை இம்முறை கிடையாது.

பதினைந்து லட்சம் வாசகர்களாவது இம்முறை கண்காட்சிக்கு வருவார்கள் என்று வளாகத்தில் இருந்த அமைப்பாளர் ஒருவர் கூறினார். தாங்கக்கூடிய திடல்தான். ஆனால் உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படுமா என்பதுதான் தெரியவில்லை. சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் இருக்கிறது. இது தெற்கிலிருந்து வருவோருக்கு வசதி. ஆனால் சென்னையின் பல பகுதிகளிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்து ஏறி வருவோரே அதிகம். இந்தப் பதிநான்கு தினங்களூக்காவது சிறப்புப் பேருந்துகள் இயக்கினால் நன்றாக இருக்கும்.

அதற்கு போக்குவரத்துக் கழகத்திடம் பேசியிருப்பதாகவும் ஏற்பாடுகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என்றும் பேசிக்கொண்டார்கள். நடந்தால் நல்லது.

No comments: