செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Monday, January 7, 2008

புத்தகக் காட்சி - மூன்றாம் நாள்

* கண்காட்சி அரங்கத்துக்கு உள்ளே இன்று நிறைய இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கின்றதைக் கண்டோம். கடந்த முறை கண்காட்சியின்போது குடிநீர்த் தட்டுப்பாட்டில் வாசகர்கள் அவதிப்பட்டதுபோன்று இம்முறை அவதியுற வேண்டியிருக்கவில்லை.

* புத்தகக் காட்சியின் மாலை நேர நிகழ்ச்சிகள் நேற்று ஆரம்பமாகிவிட்டன. அரங்கம் தயாராகிவிட்டது. நேற்று மாலை கு. ஞானசம்பந்தன் தலைமையிலான நிகழ்ச்சிக்கு நிறைய பார்வையாளர்கள் இருந்தனர். அடிக்கடி சிரிப்புச் சப்தம் கேட்டது.

* கழிப்பிட வசதி வழக்கம்போலத்தான். சில தற்காலிக ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால் நெருங்கமுடியாத அளவில் துர்நாற்றம் வீசுகின்றது. வாசகர்களுக்கு ஒரு யோசனை. புத்தகக் காட்சி அரங்கத்தின் வெளியே இடப்புறம் கண்காட்சியினர் ஏற்பாடு செய்துள்ள தாற்காலிகக் கழிப்பிடத்துக்குச் செல்வதற்கு பதில் நீங்கள் வலப்புறம் சுமார் நூறடி தொலைவில் உள்ள பள்ளிக்குச் சொந்தமான நிரந்தரக் கழிப்பிடத்தை நாடலாம். ஒழுங்காகப் பராமரிக்கப்படுகின்ற கழிப்பிடமாக அது உள்ளது.* துவக்க விழா நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். அது என்றைக்கு நடைபெறும், தமிழக முதல்வர் அவர்கள் எப்போது வருகை தரவிருக்கின்றார்கள் என்கிற விவரம் இன்று தெரியவரும். இலட்ச ரூபாய் பரிசு பெறுகின்ற எழுத்தாளர்களை கௌரவிப்பதும் அன்றைக்கே நடைபெறும்.

* நேற்று கனத்த கூட்டம் இருந்தது. அனைத்து அரங்கங்களிலும் நல்ல விற்பனை நடந்ததாகப் பேசிக்கொண்டனர். இவ்வாண்டு கவிதைத் தொகுப்பு நூல்கள் அதிகம் வரவில்லை. நா. முத்துக்குமாரின் புத்தகங்கள் நன்றாக விற்பதாகக் கேள்விப்பட்டோம். சிறுகதைகள், நாவல்கள் குறித்து வாசகர்களிடையே ஆர்வமோ அக்கறையோ உள்ளதாகத் தெரியவில்லை. கடைகளில் எடுத்துப் பார்ப்போர் கூட வாங்குவதில்லை. கட்டுரைப் புத்தகங்கள் நன்கு விற்கின்றன.

* கிழக்குப் பதிப்பகத்தினுள் விடுதலைப் புலிகள் புத்தகமும் நான் வித்யா என்ற புத்தகமும் வினாடிக்கு ஒன்றென விற்பனையாகிக்கொண்டிருக்கக் கண்டோம். மதியின் “கார்ட்டூன்கள்” ஆறு தொகுதிகளாக இங்கு வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் சிறப்பாக விற்கின்றது. எம்.ஆர். ராதா குறித்து இக்கண்காட்சியில் இரண்டு புத்தகங்களைக் காண முடிந்தது. பத்திரிக்கையாளர் மணா எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகம் ஒன்று; கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ள “எம்.ஆர்.ராதாயணம்” என்கிற புத்தகம் ஒன்று. விசாரித்ததில் இரு இடங்களிலுமே விற்பனை அமோகமாக இருப்பதாகச் சொன்னார்கள். இரு நூல்களையுமே வாங்கிவந்துள்ளோம். இரண்டினையும் பற்றிய எங்கள் அபிப்பிராயத்தினை இரண்டொரு தினங்களில் இங்கு எழுத எண்ணம்.

* நேற்று கண்ணில் தென்பட்ட பிரபல எழுத்தாளர்கள் - சாரு நிவேதிதா, எஸ். சங்கரநாராயணன், பா.ராகவன், அஜயன் பாலா (விகடனில் “நாயகன்” தொடர் எழுதுகின்றவர். இவரிடம் பலர் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டிருந்ததைக் கண்டோம்.) சாரு நிவேதிதாவும் பா. ராகவனும் தீவிரமாக ஏதோ பேசி விவாதித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசுகின்றதை ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. பல இடங்களில் இம்மாதிரி எழுத்தாளர்கள் தம்மை மறந்து பேசிக்கொண்டிருந்ததையும் பலர் அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததனையும் காணமுடிந்தது.

*நக்கீரன் அரங்கத்தில் எப்போதும் நல்ல கூட்டம் இருக்கின்றது. பல பிரபலங்களைப் பற்றிய 100 சுவையான செய்திகளைத் தொகுத்து தனித்தனியே “100 சீரீஸ்” வெளியிட்டுள்ளார்கள். சபீதா ஜோசப் என்பவர் எழுதியுள்ள இந்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றன. கடந்தவாரம் படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவைப் பற்றியும் இந்த அரங்கத்தில் சுடச்சுட நூல் தயார்! (கிழக்குப் பதிப்பகத்தில் எதிர்பார்த்து ஏமாந்தோம்.)

* சிற்றுண்டிச் சாலை ஒருவாறு இன்றைக்குத் தயாராகிவிட்டது. இன்னும் முழுமையாக ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றாலும் உண்ண உணவு கிடைக்கின்றது. அதிர்ஷ்டம் இருக்குமானால் உட்கார்ந்தும் உண்ணலாம். பூரி கிழங்கு, பஜ்ஜி போண்டாக்கள், தோசை, பரோட்டா என்று பல விதமான உணவுகள் கிடைக்கின்றன. மதிய வேளையில் சாத வகைகளும் கிடைக்கின்றன. விலை சற்று அதிகம் என்று பலர் குறைப்பட்டுக்கொண்டனர்.

3 comments:

இளங்கோ-டிசே said...

'அடையாளம்' சாதிக்கை அடுத்தமுறை சந்திப்பின், என் சார்பில் வணக்கம் சொல்லிவிடவும் :-).

ChennaiBookFair08 said...

திரு. சாதிக் அவர்களுடன் எங்களுக்கு நேரடிப் பரிச்சியம் கிடையாது. இருப்பினும் தங்கள் வணக்கத்தை அவருக்கு நிச்சயமாய்த் தெரியப்படுத்துகின்றோம். “டிசே தமிழன்” என்று சொன்னால் போதுமா? தாங்கள் எங்கு வசிக்கின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.

இளங்கோ-டிசே said...

/டிசே தமிழன்” என்று சொன்னால் போதுமா?/
அதுவே போதுமானது. நன்றி.