செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Friday, January 11, 2008

என்ன சாப்பிடலாம்?


புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இம்முறை வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் புதிய உணவு வகைகள் ஏதும் கிடைக்கவில்லை என்றபோதிலும் கிடைப்பனவற்றுள் சிலவற்றைக் குறித்து இப்பதிவு பேசும்.

பஜ்ஜி: பிற்பகலுக்கு மேல் கிடைக்கின்றது. வாழைக்காய், வெங்காய பஜ்ஜிகள் உள்ளன. பிற்பகல் வேளையில் கிடைக்கின்ற பஜ்ஜியைக் காட்டிலும் மாலை 7 மணிக்குப் பிற்பாடு கிடைக்கும் பஜ்ஜிகள் சுவையாக இருக்கின்றன. இதன் காரணம் தெரியவில்லை. பகல் பொழுது பஜ்ஜிகள் மிகவும் எண்ணெயாக இருக்கின்றன.

தோசை: கண்காட்சியில் இரண்டு தினங்கள் தோசை சாப்பிட்டோம். ஒரு நாள் புளிப்பாகவும் ஒரு நாள் நன்றாகவும் இருந்தது. தொட்டுக்கொள்ளத் தரப்படும் சட்னி வகைகள் சற்றுக் காரமாக உள்ளன. தண்ணீருடன் சாப்பிட அமர்வது நல்லது.

தக்காளி சாதம்: மதிய வேளையில் இது கிடைக்கின்றது. ருசியாகவும் உள்ளது. இதற்குத் தொட்டுக்கொள்ளக் கிடைக்கும் அப்பளம் சரியாகப் பொறிக்கப்படாதது ஒரு குறை. எண்ணெய் வடிக்காமல் அப்படியே தந்துவிடுகின்றார்கள். வாங்கியதும் எண்ணெய் வடித்துவிட்டுப் பிறகு உண்பது நல்லது.

தயிர்சாதம்: சுவையாக உள்ளது. ஆனால் மிகவும் சூடாக இருக்கின்றது. தயிர்சாதத்தின் சிறப்பே குளுமைதான். அது இங்கு மிஸ்ஸிங்.

பேரிச்சம்பழ பால்: மிகவும் ருசியான பானம். கையைக் கடிக்காத விலை. அருமையாக உள்ளது.

மசாலா சோடா: சென்ற ஆண்டும் இந்த ஐட்டம் இருந்தது. இம்முறையும் உள்ளது. எலுமிச்சை பிழிந்த சோடாவில் சில மசாலாப் பொடிகள் தூவி அளிக்கின்றார்கள். தாகத்துக்கு மிகவும் இதமாக இருக்கின்றது. ஆனால் விலை மிகவும் அதிகம்.

மிளகாய் பஜ்ஜி: மிக அருமை. அளவில் பெரிதாகவும் சுவையில் தரமாகவும் இருக்கின்றது. சுடச்சுடக் கிடைப்பதுதான் சிரமமான காரியம். போட்டு இறக்கும்போதே காலியாகிவிடுகிறது. எப்போது சென்றாலும் மீந்து இருக்கும் ஒன்றிரண்டுதான் எங்களுக்குக் கிடைத்தன.

ஆரஞ்சு டீ: பால் கலக்காத “ப்ளாக் டீ”யில் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்துத் தருகின்றார்கள். குடிக்கச் சுவையாக உள்ளது. இதே கடையினில் எலுமிச்சை, இஞ்சி டீயும் கிடைக்கின்றது.

வேகவைத்த மக்காச்சோளம், வேர்க்கடலை சுண்டல், மசாலா கடலை, பாப்கார்ன் போன்ற ஐட்டங்களும் இம்முறை உண்டு. கண்காட்சி வளாகத்தில் தினசரி நடைபெறுகின்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு அமரும் நேயர்களைக் குறிவைத்து கேண்டீனில் இல்லாத சிறு வியாபாரிகள் மேற்படி நொறுக்குத் தின்பண்டங்களை எடுத்துவருகின்றார்கள். இதன் பெயர்தான் “மகேசன் சேவை”!

2 comments:

முரளிகண்ணன் said...

ha ha ha ha ha ha

Unknown said...

ITHAI PONDRA KAMENTARIKAL THEVAIYA ?PUTHAGA KANKATCHI POI PUTHAGANGALAI PARUNGAL. ARUVAI VALARTHUKKOLLUNGAL,?????

;;;;;;Gajapathy, Bangalore.