செய்திகள் - புகைப்படங்கள் - புள்ளிவிவரங்கள்

Saturday, January 12, 2008

புத்தகக் காட்சி - எட்டாம் நாள்

கடந்த சில ஆண்டுகளாக புத்தகக் காட்சிக்கு வந்த மக்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு வருகின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றே சொல்லவேண்டும். இம்முறை பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லை என்றுகூடச் சலுகை அளித்திருக்கின்றார்கள். ஆயினும் இவ்வார தினங்கள் முழுவதும் கண்காட்சி வளாகம் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. பல சிறு பதிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கண்காட்சியில் இடம்பெறுவதற்கென அளித்த தொகையையேனும் எடுக்கமுடியுமா என்று கவலையுடன் பேசினார்கள். ஏன் இவ்வாறு ஆனது? எதனால் புத்தகக் காட்சிக்கு வருகின்றவர்களின் எண்ணிக்கை குறைகின்றது? என்பது அலசி ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம். நேற்றைய தினம் கண்காட்சிக்கு வந்திருந்தோரில் சிலரிடம் “ரேண்டமாக”ப் பேசினோம். அவர்கள் சொன்ன சில காரணங்கள் பின்வருமாறு:-

* சேத்துப்பட்டு செயிண்ட் ஜோசஃப் பள்ளி மைதான வளாகம் பெரிதாகவும் வசதி உள்ளதாகவும் இருப்பினும் “சேத்துப்பட்டு” பலருக்கு எளிதில் வந்து சேரக்கூடிய நகரம் இல்லை. ரயில், பஸ் வசதிகள் உண்டு என்றபோதினிலும் அண்ணாசாலையுடன் ஒப்பிடும்போது வந்துசெல்ல ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இடமும் இல்லை. நாங்கள் பேசியவர்களுள் சிலர், “முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட தினங்கள் கண்காட்சிக்கு வருவது வழக்கம், இம்முறை இந்த ஒருநாள் மட்டுமே வந்திருப்பதாக”ச் சொன்னார்கள்.

* கண்காட்சி நடக்கின்ற செய்தி பரவலாகத் தெரியவில்லை. சென்னையின் பிரதானமான சில இடங்களைத் தவிர புறநகரப் பகுதிகளில் விளம்பரத் தட்டிகளோ, போஸ்டர்களோ அளிப்பதில்லை. சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் இவ்வாண்டு டிவி விளம்பரங்கள் மிகவும் குறைவு. நாளிதழ் விளம்பரங்களும் போதிய முக்கியத்துவத்துடன் அளிக்கப்படவில்லை. இப்படி ஒரு கண்காட்சி நடக்கின்ற செய்தியே பலருக்குத் தெரியவில்லை.

* பொங்கல் பண்டிகையை ஒட்டி புத்தகக் காட்சி தொடங்கும் என்று நினைத்தோம். திடீரென்று இடையே கலைஞர் அவர்கள் வருகை புரிந்தார்கள் என்றொரு செய்தி பத்திரிகையில் வந்தபிறகுதான் தொடங்கிவிட்டார்கள் என்பதே தெரிந்தது.

* ஏராளமான அரங்கங்கள் இருக்கின்றபடியால் ஒன்றிரண்டு வரிசைகள் கடக்கும்போதே திகட்டிவிடுகின்றது. மேலும் வயதானவர்களால் நடக்கமுடிவதில்லை. அவர்கள் இடையிடையே அமர்ந்து ஓய்வெடுக்கவும் வசதி இல்லை. இயற்கை உபாதைகளைத் தணித்துக்கொள்ளவேண்டுமானால் அதற்கும் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியிருப்பதும், மீண்டும் உள்ளே வ்ருவதென்றால் தனியே இன்னொருமுறை டிக்கெட் வாங்கவேண்டியிருப்பதும் எரிச்சல் ஊட்டுகின்றது.

* முன்புபோல புத்தகக் காட்சி நிகழ்வினுடன் நெருக்கம் கொள்ளமுடிவதில்லை. வாசகர்களைக் காட்டிலும் பெரிய பெரிய “வி.ஐ.பி”க்களுக்காகவே இக்கண்காட்சியினை நடத்துகின்றார்களோ என்று சந்தேகம் வருகின்றது. கெடுபிடிகள் அதிகம் உள்ளன.

* புத்தகங்களின் விலை அதிகரித்துவிட்டது. ஐம்பது, அறுபது ரூபாய்களுக்கு வாங்கமுடிந்த புத்தகங்களையெல்லாம் இப்பொழுது 150 ரூபாய், 175 ரூபாய் என்று விலை வைக்கின்றார்கள்.

* முன்பெல்லாம் புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் மட்டும்தான் பல புத்தகங்களைப் பார்க்கவும் வாங்கவும் முடியும் என்கிற நிலைமை இருந்தது. இப்பொழுது பல கடைகளில் பரவலாக அனைத்துப் புத்தகங்களும் கிடைத்துவிடுகின்ற காரணத்தால், இங்கு வந்துதான் ஆகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இணையத்தில் புத்தகம் வாங்குகின்ற வழக்கம் அதிகரித்துவிட்டதும் ஒரு காரணம்.

* பொதுவாகவே திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகளூக்கான் நேயர்கள் குறைந்துவருகின்றார்கள். புத்தகமும் அவ்விதத்தில் சேருகின்றது. மக்களுக்கு அவரவர் பணியும் வருமானமுமே முக்கியமாக இருக்கின்றது. ஆர்வங்கள் குறைந்துவருகின்ற காலமாக இது உள்ளது.

மேற்கூறியவை அனைத்தும் பல்வேறு வாசகர்களிடம் பேசியபோது கிடைத்த கருத்துக்களே. முதல் இரண்டு கருத்துக்களோடு மட்டும் நாங்கள் ஓரளவு ஒத்துப்போகின்றோம். மற்றவற்றுடன் அவ்வளவாக ஒப்புதல் இல்லை.

நாளை சனிக்கிழமை தொடங்கி தொடர்ந்து பல விடுமுறை தினங்கள் வருவதனால் கண்காட்சிக்கு மக்கள்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கண்காட்சிக்கென சில சிறப்புப்பேருந்துகளாவது ஓடுமானால் (ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனை யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை.) மக்களுக்கு வசதியாக இருக்கும்.

No comments: