
நேற்று மாலை கண்காட்சி அரங்கத்தினுள் ஓரளவு நல்ல வாசகர் கூட்டத்தினைக் காணமுடிந்தது. பெருங்கூட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் பல கடைகளில் விறுவிறுப்பான விற்பனை நடபெற்றதைக் கண்டோம்.
ம.தி.மு.க. தலைவர் வைகோ மற்றும் பழ. நெடுமாறன், சைதை துரைசாமி ஆகிய மூன்று அரசியல் தலைவர்கள் இன்று வருகை தந்தார்கள். வழக்கத்தினின்றும் மாறுபட்டு, திரு. வைகோ அவர்கள் “பேண்ட்” அணிந்து இன் செய்து டிப்டாப்பாக வந்தது பலரது கவனத்தைக் கவர்ந்தது.
மாலை ஆறு மணி அளவில் வந்த வைகோ “கே.கே. பப்ளிகேஷன்ஸ்” அரங்கத்தினுள் (திரு. மு.க. ஸ்டாலினுடைய பதிப்பகம் இது என்று பரவலாகப் பேசிக்கொண்டனர்.) சென்றார். நெடுநேரம் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை ரசித்துப் பார்த்தார்.
அங்கிருந்து “கிழக்குப் பதிப்பக”த்துக்குச் சென்றார். ஏராளமான வாசகர்களும் தொண்டர்களும் அவரைச் சூழ்ந்துகொள்ள, அரங்கத்தினுள் மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு நூலாக எடுத்துப் பார்த்தார். விடுதலைப் புலிகள் என்ற புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள் நின்றபடியே படித்தார். பிறகு “மாவோ” குறித்த புத்தகம் ஒன்றினையும் “திப்பு சுல்தான்” குறித்த புத்தகம் ஒன்றினையும் வாங்கிச் சென்றார்.
“கீழைக் காற்று”, “ஆனந்த விகடன்” உள்ளிட்ட வேறு சில அரங்கங்களுக்கும் சென்று அங்குள்ளோரிடம் அளவளாவி, புத்தகங்களைப் பார்வையிட்டுச் சென்றார்.
பழ. நெடுமாறன் அவர்கள் ஒரு பெரிய அரசியல் தலைவர் என்கிற “பந்தா” ஏதுமில்லாமல் மிகவும் எளிமையாக அனைவருடனும் பேசினார். அவரது அறிக்கைகளிலும் பேச்சுக்களிலும் காணப்படுகின்ற தீப்பொறிகள், தனிப்பட்ட முறையில் பேசும்போது சுவடில்லாமல் இருக்கின்றது. அரங்கினுள் தம்மைக் கவரும் புத்தகங்களை நிதானமாக எடுத்துப் புரட்டிப் பார்த்தார்.

இன்றைக்கு மாலை புத்தகக் காட்சிக்கு கனிமொழி அவர்கள் வருகை தருவார்கள் என்று சிலர் பேசிக்கொண்டனர். “இம்முறை கண்காட்சிக்கு விளம்பரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அதனைச் செய்வார்களேயானால் இன்னும் நிறைய மக்கள் வருவார்கள். விற்பனை பெருகும். வி.ஐ.பிக்கள் வருவதனால் என்ன பயன்?” என்று சில பதிப்பாளர்கள் குறைப்பட்டுக்கொண்டனர்.
1 comment:
---சில பதிப்பாளர்கள் குறைப்பட்டுக்கொண்டனர்.---
எந்த பதிப்பாளர்கள்? 'விஷயமறிந்த வட்டாரங்கள்' என்று ஹேஷ்யமாய் எழுதும் நாளிதழ் போல் வதந்தி செய்தியா :))
Post a Comment